சென்னை: அமைச்சர் உதயநிதிமீது,  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுறிது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. மேலும், இந்து மதத்தை புண்படுத்தியதாக பாஜகவினர், இது அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அவர் மீது பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனது பேச்சை பாஜகவினர் திரித்து கூறி வருவதாக கூறிய உதயநிதி,  தன் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என   அறிக்கை வெளியிட்டார். அதில்  பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதில், சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.

மேலும், பாஜக கைகளில் எடப்பாடி பழனிசாமி மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.  கோடநாடு கொலை வழக்குடன் தொடர்புபடுத்தி அவதூறாக அறிக்கை வெளியிட்டிருப்பதால் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன்மீதான அவதூறு பரப்பியதற்காக  உதயநிதியிடம்  ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி  சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்துள்ளார்.  மேலும்,, தன்னை பற்றி அவதூறாக பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு  அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும்  எதிர்ப்பார்க்கப்படுகிறது.