சென்னை:  வங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இது  தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவாகி உள்ளதால், சென்னை உள்பட தமிழ் நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில்  நேற்றுமுதல்  கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயில் நீடித்து வருகிறது. வேலூர் உள்பட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்க 100 டிகிரிவை தாண்டியுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதி யில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது  இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி , ஈரோடு, கரூர் , நாமக்கல், சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கலம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்பதால் இன்று அந்தமான் கடல் , தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் , தென் மத்திய மேற்கு வங்க கடல் ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில்  அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நல்ல மழை பெய்தால் மட்டுமே அக்னி வெயிலால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.