சென்னை: தமிழ்நாட்டில் செனினை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும்,   டிசம்பர் 7,8,9ல் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருந்தாலும் ரெட் அலர்ட் கொடுக்கப்படவில்லை எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.  பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி காலை  வடதமிழகம்-புதுவை,   மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும்.

05.12.2022 மற்றும் 06.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

07.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதிகள் :  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் 05.12.2022,  06.12.2022   நாட்களில் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் 05.12.2022-07.12.2022   நாட்களில் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் 06.12.2022   அன்று வீசக்கூடும்; காற்றின் வேகம் படிப்படியாக  உயர்ந்து 07.12.2022   அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் 08.12.2022   அன்று று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக  குறையக்கூடும்.

தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள் :  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022   அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக  உயர்ந்து 08.12.2022   மாலை  முதல் 09.12.2022  காலை வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து   09.12.2022 மாலை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா பகுதிகள்: 07.12.2022 முதல்  09.12.2022 வரை  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.