டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசத்துக்கு இன்றே கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தனி நபா்கள் 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10ம் தேதி வரையும், நிறுவனங்களுக்கான அவகாசத்தை பிப்ரவரி 15ம் தேதி வரையும் மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதம் 30ம் தேதி 3வது முறையாக நீட்டித்திருந்தது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்தை கருத்தில் கொண்டு, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.

அதன்படி, வரி செலுத்துவோர் அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் நாளை முதல் அபராதம் செலுத்தியே வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.