சமோலி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இதுவரை 54 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த.7ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 8வது நாளாக நீடிக்கிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், இன்று மேலும் 6 சடலங்கள் மீட்கப்பட மொத்தம் 54 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில், 29 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  மாநில பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மாயமான 150 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.