லண்டன்: தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ரத்துசெய்துவிட்டு, தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோப்பையில் விளையாட தயாராக இருந்தார் டி வில்லியர்ஸ் என்று கூறியுள்ளார் தற்போதைய தென்னாப்பிரிக்க கேப்டன் டூ பிலெஸ்ஸிஸ்.

ஆனால், அவரின் அந்த அறிவிப்பு மிகவும் தாமதமான ஒரு தருணத்தில் வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

டூ பிலெஸ்ஸிஸ் கூறியுள்ளதாவது, “உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இரவு, டி வில்லியர்ஸ் என்னை தொலைபேசியில் அழைத்து, அணியின் நன்மைக்காக தன் ஓய்வு அறிவிப்பை தள்ளி வைப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அவரின் அந்த முடிவு மிகவும் தாமதமானது என்று நான் கூறினேன். ஏனெனில், அந்த சமயத்தில் 99.99% அனைத்தும் முடிவாகிவிட்டது. ஆனாலும், அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரிடம், டி வில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்க்கும் சாத்தியம் குறித்து பேசினேன்.

ஆனாலும், கடைசி நேரத்தில் எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்துவிட்டனர்” என்றுள்ளார் டூ பிலெஸ்ஸிஸ்.
தென்னாப்பிரிக்க அணி, இதுவரை உலகக்கோப்பையில் தான் விளையாடியுள்ள 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.