சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு ஆளுநர் மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.  தயாநிதி மாறன் குற்றச்சாட்டு இழிவான நோக்கம் கொண்டது என கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண விழா கடந்த பிரப்ரவரி மாதம்  2 நாட்கள் நடைபெற்றது. பிப்ரவரி 21, 22 ஆகிய 2 நாட்கள் இந்த விழாக்கள் நடைபெற்றன.   இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஒருவாரமாக அங்கே தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டனர்.   திருமண நிகழ்வுக்கு அரசியல் ரீதியாக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல்,  திருமன வீட்டாருக்கு  நெருக்கமானவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். இதனால், இந்த நிகழ்வு வெளியே தெரியவில்லை.

இந்த நிலையில்,  சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி. தயாநிதி மாறன்,  “ஆளுநர் பொறுப்பு என்பது அரசு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு பொறுப்பு. அது மாதிரியான பொறுப்பை வாங்கிக் கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை இதுபோன்று ஆளுநர் ரவி சிரமத்துக்குள்ளாக்கி வருகிறார். மத்திய அரசு, வேறு ஏதேனும் உயர் பொறுப்புகளை வழங்கும் என்ற ஆசையில் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வருகிறார்.” என்று குற்றம் சாட்டியவர், ஊட்டியில் இருக்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,  விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகைக் கட்டணம், டீ மற்றும் காபி உட்பட உணவு, விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவும் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆளுநர் குறித்து தயாநிதி மாறன் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு இழிவான நோக்கம் கொண்டவை என காட்டமாக தெரிவித்து உள்ளது.

தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றஞ்சாட்டிப் பேசியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்த தகவல்கள் தவறானவை என்பதோடு விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால் நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

நடந்த உண்மைகள்:

• மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிப்ரவரி 21 – 232022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.

மாண்புமிகு ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.

• விருந்தினர்கள் மட்டுமன்றி மாண்புமிகு ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

• தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன்சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.

• முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.

• மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.

• முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர். ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை. விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் மாண்புமிகு ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.

மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் மாண்புமிகு ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது .