சென்னை

நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் வேளச்சேரியில் ரூ. 6000 நிவாரண நிதி வழங்குவதைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர்,  ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகளில் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழக அரசு யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு, டோக்கன்களை விநியோகிக்கும் பணியையும் தொடங்கியிருந்தது. நாளை மறுநாள் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.