அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரம் கோயில் நடை சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சூரிய கிரகணம் மாலை 5:11 தொடங்கி 6:27 வரை நீடிக்கும் என்பதால் 25ம் தேதி காலை 8:11 முதல் இரவு 7:30 வரை அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சந்திர கிரகணம் நவம்பர் 8 ம் தேதி பிற்பகல் 2:39 முதல் மாலை 6:19 வரை நீடிக்கும் என்பதால் அன்று காலை 8:40 முதல் இரவு 7:20 வரை அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

கிரகணம் முடிந்த பிறகு கோயிலை தூய்மைபடுத்திய பிறகு பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வி.ஐ.பி. உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும் இவ்விரண்டு நாட்களில் நிறுத்திவைத்துள்ளது.

தவிர கிரகண காலத்தில் சமைக்கக்கூடாது என்ற ஐதீகம் கடைபிடிக்கப்படுவதால் அந்த நாட்களில் அன்னதானமும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளது.

இதனால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அதற்கேற்றாற்போல் தங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.