பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவனை வெறித்தனமாக தாக்கிய காணொளி பரபரப்பாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது நினைவிருக்கலாம். அத்தாக்குதல் ராக்கிங் காரனமாக நடத்தப்பட்டதாகவே முதலில் கருதப்பட்டது.
ஆனால் பாதிக்கப்பட்ட மாணவன் என்.டி.டி.விக்கு எழுதியுள்ள கடிதத்தின் வாயிலாக தாக்குதலுக்கான உண்மைக் காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. தான் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றும். தான் மிகவும் நன்றாகப் படிப்பதாலேயே தன் மீது பொறாமை கொண்ட உயர்சாதி மாணவர்கள் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார். நான் நன்றாகப் படிப்பதால் எனது வீட்டில் எனக்கு நல்ல பெயர், ஆனால் வகுப்பறையிலோ தலித் என்ற காரணத்தால் கொடூரமாக துன்புறுத்தவும் அவமானப்படுத்தவும் படுகிறேன். இக்கொடுமை இரண்டு ஆண்டுகளாக எனக்கு தினமும் நடந்து கொண்டிருக்கிறது. எனது பள்ளி இறுதித் தேர்வுகள் அடுத்த ஆண்டு வரும் நிலையில் நான் எப்படி அதற்கு தயாராவது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவரும் காவல்துறை அதிகாரியான பாப்பன் பைதா என்பவர் இந்த துன்புறுத்தல் இந்த மாணவனுக்கு பல மாதங்களாக தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உனா நகரில் தலித் மக்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு தாக்கப்பட்ட வீடியோ அங்கு தலித் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை கொண்டுவந்தது. இந்த வீடியோவும் வைரலாக பரவி பீகாரில் தலித் மக்களின் கோபத்தை கிளரி விட்டிருக்கிறது.
முந்தைய செய்தி
ராகிங்: சக மாணவனை வெறித்தனமாக தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு