சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்தியஅரசு தாதாசாகேப் விருது அறிவித்து உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்பட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக., இந்திய அரசின்  மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விருது பெறும் ரஜினிக்கு  பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தனக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி அறிக்கை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் திறமையைக் கண்டு ஊக்குவித்த நண்பர் ராஜ்பகதூருக்கும், அண்ணன் சத்யநாராயண ராவ், இயக்குநர் கே.பாலசந்தர், பிரதமர் மோடி, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திரையுலகை சார்ந்தவர்கள், ரசிகர்கள் என பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு பதிலாக “எடப்பப்படி” பழனிசாமி என பிரிண்டாகியுள்ளது. இது சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.