சென்னை: சென்னை உள்பட சில மாவட்ட மக்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் இரவு கரையை கடக்கும்போது,  மணிக்கு 85கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர்  அதிகாலை தீவிரமடைந்தது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது சாதாரண புயலாக வலுவிழந்து சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் வலுவிழந்துள்ளதால்,  சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்போது மணிக்கு 85கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.