ருமபுரி

ணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தருமபுரியில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானதில் தவறு செய்தவர்கள் மீது தண்டனை உறுதி எனக் கூறி உள்ளார்.

தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக திறந்த வெளி நெல் கிடங்கு தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் மூட்டைகள் மாயமானதாகப் புகார் எழுந்தது.

எனவே, நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள்  கடந்த சில நாட்களாகத் தருமபுரி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

“தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22,273 டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 டன் அரவைக்கு அனுப்பியது போக 15,099 டன் இருப்பு உள்ளது. இதில்இருந்துதான் 7 ஆயிரம் டன் இருப்பில் இல்லை என்று ஒரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகச் செய்தி வந்தது.

இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநரையும் அந்த கிடங்கில், 100 சதவீதம் தணிக்கை செய்து உண்மைத் தன்மையை அறிய உத்தரவிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு, வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்துவரும் முதல்வர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்ற பொறாமையின் உச்சக்கட்டத்தில், செய்தியை ஆராயாமல் வசவுகளை எதிர்க்கட்சித் தலைவர் அள்ளித் தெளிக்கிறார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.”

எனத் தெரிவித்துள்ளார்.