ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான இறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அகமதாபாத் நகரில் 700 கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தின் போது மழை பெய்ததால் பார்வையாளர் கேலரி அருவி போல் ஆனதும் மைதானம் தெப்பக்குளம் ஆனதும் அனைவருக்கும் நினைவிருக்கும்.

கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் கோப்பையை வெல்ல உதவினார்.

இந்த நிலையில் இந்த கோப்பையுடன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களான இவர்கள் இருவருடன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடனிருந்தார்.