தஞ்சாவூர்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், ஒருதலைப்பட்சமாக கணக்கெடுத்தாகவும் குற்றம் சாட்டி,  தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் இன்று காலை கையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக, அரசு நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதமும் பேரிடர் நிவாரணம் நிதியிலிருந்து நிவாரணம் வழங்கிட வலியுறுத்தினர்.

இதையடுத்து, அரசு அதிகாரிகளை கொண்டு கணக்கெடுப்பு நடத்தியது. தொடர்ந்து அமைச்சர்கள் குழுவும் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. அவர்கள் நடத்திய ஆய்வறிக்கை இன்று முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் வட்டார  பகுதி விவசாயிகள், பயிர் சேதம் குறித்து கணக்கெடுத்த வருவாய்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதாகவும், முறையாக கணக்கெடுப்பு நடத்த வில்லை என்று கூறிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது செய்தியளார்களிடம் பேசிய விவசாயிகள், பயிர்   பாதிப்பு குறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு பல முறை தகவல்கள் தெரிவித்தும், கணக்கெடுப்பு பணிகளை செய்யாமல் விவசாயிகளை அலட்சியப்படுத்தி வருகின்றர் என்று கூறியதுடன்,  பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் உரிய பயிர் இழப்பீட்டு தொகையை பெற்றுதர நடவடிக்கை எடுக்க என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் திருவோணம் வட்டார விவசாயிகள் ஊரணிபுரம் கடைத்தெரு பகுதியில் அழுகிய பயிர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.