சென்னை

நாளை சென்னையில் நடைபெறும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களுக்குப் பேருந்து பயணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 முதல் ஏரல் 7 வரை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நடைபெறுகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. போட்டிக்கான டிக்கெட் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு இணையதளம் முடங்கும் அளவிற்கு சி.எஸ்.கே. ரசிகர்கள், போட்டியைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர்.

ரசிகர்களுக்கு மேலும்  ஒரு இனிப்பான செய்தி ஒன்றைச் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல். போட்டியைக் காணச் சென்னை சேப்பாக்கம் மைதானம் வரும் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய  ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், தங்களது இணைய டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணிநேரத்திற்கும் பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஏ.சி பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.