டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று ஒரு நபருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் வீரர்களுக்கும் தொற்று பரவியுள்ளதால் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் 5 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான சர்வதேச வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்களுக்கும் சோதனை நடத்தப்படும் போது, மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனிடையே டோக்கியோ நகரத்திலும் நான்கு நாட்களாக தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.