டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகளை திறம்பட ஜப்பான் அரசு நடத்துகிறது.

ஒலிம்பிக் 2020 போட்டிகள் இன்று (ஜூலை 23)ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 205 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்குகொள்கின்றனர். இந்த  ஒலிம்பிக் திருவிழா ஜப்பானின் டோக்கியோவில் இன்று மாலை கோலாகலமாக தொடங்க உள்ளது.

1964 ஆம் ஆண்டுக்கு பின் ஜப்பான் 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ளதால், தொடரை நேரடியாக காண கடந்த ஆண்டே போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கிக் குவித்து விட்டனர். தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ரசிகர்களின்றி மூடிய அரங்கில் போட்டிகள் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து உள்ளது.,

தற்போது நடைபெறும் போட்டியில், 339 உட்பிரிவுகளுடன் 33 விளையாட்டுகள் நடைபெற உள்ளது. இந்த தடவை முதன்முறையாக  கராத்தே, அலை சறுக்கு, செங்குத்தான பாறைகளில் ஏறும் விளையாட்டான ஸ்போர்ட் க்ளைம்பிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் உள்ளிட்ட விளையாட்டுக்கள்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலப், ஸ்டான் வாவ்ரிங்கா. கால்பந்து வீரர்களான நெய்மர், கிலியான் மாபி, கென்ய வீரர் டேவிட் ருதிசா உள்பட  45-க்கும் மேற்பட்ட முன்னணி வீரர்கள் ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகியுள்ளனர். காயம் காரணமாக சிலர் பங்கேற்காத நிலையும்உள்ளது. இருந்தாலும் சுமார் 11 ஆயிரம் கலந்துகொள்வார்கள் என்று ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக அமெரிக்கா 613 பேரை களம் இறக்குகிறது. இந்தியாவில் இதுந்து  இதுவரை இல்லாத அளவில்  125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.
இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஆக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 2 பதக்கம் மட்டுமே கிடைத்தது. இந்த முறை நிச்சயம் அதை விட கூடுதலாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் இருந்தும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள, வாள் வித்தை பிரிவில் பவானி தேவி, டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன், டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல் ஆகியோர் தமிழகத்தில் இருந்து பங்கேற்கின்றனர்.
துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப்படகு போட்டியில் மகளிர் பிரிவில் நேத்ரா குமணன் , பாய்மரப்படகு போட்டியில் இணையராக கணபதி, வருண் ஆகியோர் பங்கேற்று விளையாட உள்ளனர்.  தமிழக வீரர், வீராங்கனைகள் 13 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்வோருக்கு 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு 2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு1 கோடி ரூபாயும் வழங்கப்படும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்க  அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால்,  ஜப்பான் மட்டுமின்றி உலக நாடுகளின் விளையாட்டு ரசிகர்கள் அனைவருக்குமே ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த கொரோனா சூழலிலும் போட்டிகளில் கலந்துகொள்ள டோக்கியோ சென்றுள்ள இந்தியா உள்பட உலக நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் புதிய புதிய சாதனைகளைப் படைக்க பத்திரிகை டாட் காம் இணையதளம் வாழ்த்துகிறது.