டெல்லி: உருமாற்றமாகி பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க பூஸ்டர் போடுவதே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. இருந்தாலும் முக்கவசம் அணிய வேண்டும் என்றும், அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை  184,52,44,856 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சீனா உள்பட சில நாடுகளில் பரவி வரும் புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய மருத்துவ நிபுணர்கள்,  இந்தியாவை பொறுத்த வரை தடுப்பூசி போட்டவர்களிலும் 30 சதவீதம் பேர் அவர்கள் நினைப்பது போல் முழு பாதுகாப்பாக கருத முடியாது அதனால், பூஸ்டர் போடுவதே சிறந்தது, அது உருமாற்ற வைரசை எதிர்க்கும் என தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசிகளின் ஆற்றல் 6 முதல் 8 மாதங்கள் வரைதான் உடலில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள என  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் மெஹ்ரா கூறி இருக்கிறார். இந்த ஆய்வுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒரு கொரோனா அலை வந்தால் அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சும்மா இருக்க முடியாது, 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பு 2-வது டோஸ் எடுத்தவர்கள் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்றும்,  அனைத்து வயதினருக்கும் பூஸ்டர்களை அரசாங்கம் விரைவில் அனுமதிக்க வேண்டும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.