புதுடெல்லி: சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலடியாக 61 பிரபலங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த எதிர் – பதில் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களுள் நடிகர் கன்கனா ரானத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, நடனக் கலைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சோனல் மான்சிங், வாத்தியக் கலைஞர் விஷ்வ மோகன் பத், திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் அடக்கம்.

“மாவோயிஸ்டுகளால் பழங்குடி மக்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து இந்தப் பிரபலங்கள் ஏன் வாய் திறப்பதில்லை? இது ஒரு தனிப்பட்ட வன்மம் மற்றும் பொய்யான கதையாடலாக இருக்கிறது” என்று அந்தப் புதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமருக்கான கடிதத்தை எழுதியவர்களுள் அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென், மணிரத்னம், ஷியாம் பெனகல், கேடன் மேதா, ரேவதி ஆஷா, கொளத் கோஷ், அமித் செளத்ரி, ஆஷிஸ் நந்தி, சுமித் சர்கார் மற்றும் தனிகா சர்கார் போன்ற பிரபலங்கள் அடக்கம். இவர்களுள் பெரும்பான்மையோர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.