சென்னை: சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான் என ஊழல் வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி பாஸ்கரன் 1,500 ரூபாய் லஞ்சம் பெற்றதால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான  வழக்கில், தனக்கு எதிராக காவல்துறையில்  எந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை . எனவே  இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என பாஸ்கரன் செனனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து  கூடுதல் டிஜிபி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் வைத்தியநாதன்,  நக்கீரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என கூறிய நீதிபதிகள், பாஸ்கரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மீது தினமும் விசாரணை நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள் ஊழல் தனது வேர்களை பரப்பி கரையான் போல செயல்பட்டு சமுதாயத்தை செல்லரிக்க செய்து விட்டது என  வேதனை தெரிவித்தனர்.