சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் குறித்து  லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் தாக்ஷன் என்பவர், தி.நகர் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது ஊழல் புகார் கூறியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,   கடந்த 2017-18 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் வசதி மேம்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், பொதுமக்களுக்கு குழாய்கள் அமைக்க பயன்படுத்த வேண்டும் வேண்டிய தொகையில் 8 லட்ச ரூபாயை மட்டுமே செலவழிக்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை 31 சாலைகள் பராமரிப்புக்காக செலவழித்து உள்ளதாகவும், அதற்கான டெண்டரை டி.எம்.சுப்ரமணியம் என்பவருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு  சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தக்கோரி கடந்த ஜனவரி 29ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துதேன். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் பால் வியாபாரியாக இருந்த அதிமுக எம்எல்ஏ சத்யாவிற்கு, தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது, இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பவானி சுப்பராயன் விசாரித்தார். அதைத்தொடர்ந்து,  வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.