சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி  சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி,  அரசியல்வாதிகளின் புகழிடமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். பின்னர் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஒரு மாதத்திற்கு பிறகு, சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.

இதற்கிடையில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை, எம்.பி., எம்எல்எக்கள் மீதான வழக்கை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம்,  செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நேற்று (ஆகஸ்டு 28ந்தேதி) நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து  உத்தரவிட்டுள்ளது. மேலும் இனி நீதிமன்ற விசாரணைக்கு  நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி வாயிலாக ஆஜராகலாம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி கூறினார்.  அத்துடன் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரவரம்பு இல்லை எனக் கூறியதுடன், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தியது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி அல்லியிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டுள்ளார்.