கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துக் கொண்டே வந்ததை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது,

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 540 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த தடுப்பு முகாமில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ள பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.