சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரது ரத்த மாதிரி ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

நடிகர் வடிவேலு படப்பிடிப்பாக வெளிநாடு சென்றுவிட்டு, நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வடிவேலுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று மரபணு மாற்றம் அடைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அவருக்கு ஒமிக்ரான் தொற்றா என்பதை கண்டுபிடிக்க அவரது மாதிரிகள் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.