மதுரை: சமையல் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க இந்த தடையை விதித்துள்ளதாக கூறியுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாகவும், கடைகளில் சில்லறைக்கு விற்கப்படும் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்படுவதாம், அதை தடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இன்று விசாரித்தது. அதைத்தொடர்ந்து,  சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் உள்ளன என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியதுடன்,
இது தொடர்பான விவரங்களை தமிழகஅரசு மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதுடன், தமிழகத்தில் சமையல் எண்ணெயை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்த சமையல் எண்ணெய்களையே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கினை ஜனவரி 18 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உயர்நீதிமன்றம் மதுரையின் இந்த உத்தரவு, தமிழகத்தில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் மற்றும் செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்பவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.