ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதியை பகிரங்கமாக விமர்சித்த வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கு கடந்த 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவரான வைத்தியநாதன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனக்கும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கை தொடர்ந்து தான் நடத்துவதாக இருந்தால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து போஸ்ட்மார்டம் செய்ய உத்தரவிடுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ “ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி தெரிவித்த கருத்து ஜெயலலிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. ஒரு நீதிபதி இப்படிப் பேசினது தவறு” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிபதியை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக வைகோ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டது.  விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.