சென்னை:
ண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இன்று நடக்க உள்ள தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று மாலை சென்னை வந்தார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், உம்மன்சாண்டி, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், தி.மு.க., சார்பில் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.