சென்னை

லங்கை படையினரால் தமிழக மீன்வர்கள் கைது செய்வதை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது என்று கே எஸ் அழகிரி அற்வித்துள்ளார்..

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

”இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரையில் 13 சதவிகித கடற்கரை பகுதி தமிழகத்தில் இருக்கிறது. 1,076 கி.மீ. நீளம் கொண்ட தமிழக கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களும், லட்சக்கணக்கான மீனவ மக்களும் காலம் காலமாக வசித்துக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3-ம் தேதி இராமேஸ்வரம், தங்கச்சிமடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய இரண்டு நவீன மீன்படி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். மேலும் பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

ஒவ்வொரு மீன்பிடி படகின் விலை ரூபாய் 25 லட்சத்திலிருந்து 1 கோடி வரை இருப்பதால் பொருளாதார பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இதுவரை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 150 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு பல்வேறு மீனவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

நடப்பு 2024-ம் ஆண்டில் இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டதோடு, கடந்த ஆண்டும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014 முதல் இத்தகைய கைது நடவடிக்கைகளும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவதும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி நிகழ்த்தப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. சிலநேரங்களில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், 45 மீனவர்கள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழக மீனவர்கள் காலம் காலமாக எந்த கடல் பகுதியில் மீன்பிடித்தார்களோ, அந்த உரிமையை பாதுகாத்து மீட்டெடுக்காமல், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி செய்வதாகவும், நீல புரட்சி திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அறிவித்திருப்பதனாலும் மீனவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. கடலில் மீன்பிடிக்கிற போது, இந்திய – இலங்கை கடல் பகுதி என்பது மிக குறுகலாக இருப்பதால், எங்கே சர்வதேச கடல் எல்லை இருக்கிறது என்பதை துல்லியமாக நிர்ணயிக்க முடிவதில்லை. இத்தகைய பிரச்சினைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து கூட்டு பணிக்குழுவை ஏற்படுத்தின. இந்த கூட்டு பணிக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடுவதோடு, இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை 5 முறை மட்டுமே கூடிய கூட்டு பணிக்குழு, கடந்த 2022-க்கு பிறகு கூடவே இல்லை. இதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுக்காததின் விளைவாக மீனவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து கைதுகளும், படகுகள் பறிமுதலும், சிறை காவல்களும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 110 மீன்பிடி படகுகளை மீட்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தங்களது வாழ்வாதாரத்தை பணயம் வைத்து இரவு – பகல் பாராமல் கடலில் பயணித்து மீன்பிடித் தொழில் செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை தங்களது தொழில் மூலம் பெற்றுத் தருகிற மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். 

கடல் தாமரை மாநாடு நடத்தி மீனவர்களுக்கென தனி அமைச்சகம் தொடங்கப்படும் என அறிவித்து, 10 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றாத பா.ஜ.க., அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதையும், கண்டிக்கிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், வருகிற 10.2.2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் இராமேஸ்வரம், அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் உள்ள பாம்பன் பேருந்து நிலையத்தின் முன்பு, மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” 

என்று தெரிவித்து உள்ளார்.