டில்லி

திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மறைமுகமாக பாஜகவுக்கு உதவுவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாநிலக் கள நிலவரங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த களப்பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில்  ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

இவ்வாறு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு முக்கிய கட்சிகள், தனித்துப் போட்டியிட முடிவு எடுத்திருப்பது கூட்டணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான தீபா தாஸ் முன்ஷி இது குறித்து,

“பாஜகவுக்கு மம்தா பானர்ஜி மறைமுகமாக உதவுகிறார் என்றே நான் நினைக்கிறேன். அவருக்கு பாஜகவுடன் மறைமுகமான தொடர்பு இருப்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.  தற்போது அவரது இந்த முடிவு அதை நிரூபித்துள்ளது. 

அவர் இதுநாள் வரை இந்தியா கூட்டணியில் இருந்தார். இப்போது அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆகவே அவர் பாஜகவுடன் கைகோர்த்து இருக்கிறார் என்பதையும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவார் என்பதும் நிரூபணமாகி உள்ளது”

என்று கூறியுள்ளார்.