அகமதாபாத்: பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், பல்வேறான திட்டங்களை, இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வகுத்து செயல்படுத்தவுள்ளது காங்கிரஸ் கட்சி.

இம்மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் கூடவுள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய செயல் கமிட்டி கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் இறுதி செய்யப்படவுள்ளன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தல்களில் கிடைத்த வெற்றியை அடுத்து, புத்தெழுச்சிப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் நிகழ்ந்த பாகிஸ்தானுடனான பிரச்சினை மற்றும் இந்தியா நடத்திய விமானத் தாக்குதல் ஆகியவற்றால் பாரதீய ஜனதாவுக்கு எதிர்பாராமல் கூடியுள்ள செல்வாக்கை சமாளிப்பது மற்றும் தேர்தலில் வெற்றிவாய்ப்புள்ளவர்களுக்கே இடம் கொடுப்பது, காங்கிரஸ் தலைவர் பேசவுள்ள இடங்களை தீர்மானிப்பது உள்ளிட்ட விஷயங்கள், அக்கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளன.

– மதுரை மாயாண்டி