டில்லி

செல்லப் பிராணிகளை ரயில் பயணிகள் தங்களுடன் கொண்டு செல்ல முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட உள்ளன.

ரயிலில் பயணம் செய்யும் போது செல்லப் பிராணிகளை தங்களுடன் அழைத்துச்  செல்ல அனுமதிக்க வேண்டும் என வெகுநாட்களாகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.    தற்போது அதையொட்டி ரயில் பயணிகள் செல்லப் பிராணிகளை தங்களுடன் கொண்டு செல்வதற்கான நடைமுறையை எளிதாக்க ஐஆர்சிடிசி தனது இணைய தளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய உள்ளது.   அவ்வாறு பிராணிகளை அழைத்துச் செல்ல சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவை,

“செல்லப் பிராணிகள் 2 அல்லது 4 படுக்கை வசதிகள் கொண்ட முதல் வகுப்பு ஏசி பெட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்கு மற்ற பயணிகள் புகார் தெரிவித்தால், செல்லப் பிராணிகள், ரயில்வே சரக்கு பெட்டிக்கு அனுப்பப்படும்.  தவிர ரயிலின் முதல் சார்ட் தயாரான பின்புதான், பயணிகள் செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அத்துடன் செல்லப் பிராணிகளைக் கொண்டு செல்லும் பயணிகளின் டிக்கெட்டும் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.  முன்பதிவை ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் மூலமாகச் செய்ய முடியும்.

தவிர செல்லப் பிராணிகளை ரயிலில் கொண்டு செல்லும் வசதி தொடங்கியவுடன், ரயில்வே டிடிஇ-யும், செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு செல்லப் பிராணிகளுக்காகப் பெறப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ, ரயில் ரத்து செய்யபட்டாலோ, 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமானாலோ, பணம் திரும்பக் கிடைக்காது., பயணிக்கு மட்டும் டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்”

என்பவை ஆகும்.