டில்லி

ன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிமுக அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் நிர்வாகி புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்ததால் கட்சி பிளவு படும் சூழல் ஏற்பட்டது.  தலைமைத்  தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.  கடந்த 2017 பிப்ரவரியில் தலைமைத் தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பின்படி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

இதை திரும்பப்  பெறக் கோரி அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.  புகழேந்தி இது குறித்து, “ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையானது கட்சியின் ஆட்சிமன்ற குழுவினை கூட்டுவது இல்லை. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர். இரண்டு மாநிலங்களவை பதவிகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் வழங்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க சிவில் நீதிமன்றம் நடத்தி வரும் சசிகலா மற்றும் மறைந்த வெற்றிவேல் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்பவர் வி.கே.சசிகலா கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

அதே நேரத்தில், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது அவர் ஜாமீனில் இருக்கிறார். இதுபோல, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி என்பவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளராகத் தொடர்ந்து செயல்படுகிறார்.

அவர் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அவரது மனைவியை இரண்டு முறை நிறுத்தி அவரே பிரச்சாரம் செய்கிறார். இவ்வாறு, நீதிமன்றங்களில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடவும், கழகத்தின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கும் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராக அனுமதி வழங்கியுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடப் பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது இதுபோன்ற செயல்பாடுகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகப் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் கட்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இரட்டை இலைச் சின்னம் மற்றும் அதிமுக பெயரினை பயன்படுத்த அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்யக் கோரியுள்ளேன்.” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.