சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு, பிரச்சார வேலைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பது என பரபரப்பாக உள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், தொகுதி பங்கீட்டில் இந்திய கம்யூனிஸ்ட் – திமுக, இரு கட்சிகளுக்கிடையில் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு: திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட் – திமுகவுக்கிடையில் சிக்கல் நிலவுவது போலும் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன.

அத்தகைய செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறது. தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.