சென்னை:

ஆர்.கே.நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்தது. திமுகவின் இப்படுதோல்வி அக்கட்சியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதனிடையே ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி குறித்து ஆராய விசாரணைக் குழுவை திமுக அமைத்துள்ளது. திமுக சட்டசபை கொறடா சக்கரபாணி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டத்துறை இணை செயலாளர் கண்ணதாசன் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு வரும் 31-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .