சென்னை: தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகள் விரைவில் கலர் மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கியது திமுக அரசின் முடிவு என்று கூறியவர்,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில்தான், போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டது,  பேருந்துகளை அரசுடைமையாக்கி போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கியதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்கியது என்பதை நினைவு கூர்ந்தார்.

நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டம், பெண்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த பேருந்துகளில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளார். இதற்காக பேருந்துகளை நிறமாற்றம் செய்வது குறித்து விரைவில் முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும், அதன்பிறகு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.