கோவை

கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கோவை ஹூசூர் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அரங்கம் ஒன்றில், “சமகால கன்னட இலக்கியம்” என்ற பெயரில் ஒரு அமைப்பு  நேற்று கருத்தரங்கம் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ko
இது குறித்த தகவலை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மனோகரன், ஆறுச்சாமி ஆகியோர் தலைமையில்  இருபதுக்கும் மேற்பட்டோர் அரங்கத்தின்  முன் கூடினர்.
பிறகு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கொடியுடன் அந்த அரங்கிற்குள் நுழைந்தனர். கர்நாடகா காவிரி நீர் தர மறுப்பதையும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து முழக்கமிட்டனர்.  அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த பதாகையை கிழித்து வீசினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். இருதரப்பிடமும் பேசினர்.
இதையடுத்து கருத்தரங்கு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, அதில் கலந்துகொண்டவர்கள் வெளியேறினர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மனோகரன், “ காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழர்களை, கர்நாடகத்தில் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இதற்காக கர்நாடக முதல்வர்  சித்தராமையா,தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.