கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த நபர் உயிரிழந்தார். இந்த காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது என தமிழக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், காரில் இருந்த குண்டு வெடித்துதான் இறந்ததாக பாஜக உள்பட பல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கான ஆதாரங்கள், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.  இது தொடர்பாக தடவியல் நிபுணர் குழுக்கள் சோதனை செய்ததில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததும் , காரில் இரும்பு ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் ஆகியவை இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் குண்டுவெடிப்பு என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும், ஜமேஷ் முபின் வீட்டில் சோதனை செய்ததில் வெடி தயாரிக்கும் மூல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், காரில் உள்ள குண்டுவெடிப்பு காரணமாகவே சிலிண்டர் வெடித்து, ஜமேஷ் முபின் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கார் வெடிகுண்டு வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கதவார அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்றும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் இலங்கை குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இந்த  கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஜமேஷ் முபினுக்கு உதவியதாக 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் விசாரணையில் இருக்கின்றனர். கோவை காவல்துறையினர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நேரில் வந்து ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு, என்ஐஏ விசாரணைக்கு அவசியமில்லை, தமிழ்நாடு காவல்துறையே விசாரணை நடத்தும் என கூறியிருந்தார். ஆனால்,  தமிழகஅரசை மீறி, இன்று தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள்   கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வெடித்த இடம், முபின் வீடு என பல்வேறு இடங்களில் தனி தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். இது  வழக்கமான ஆய்வு பணிகளை தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கார் குண்டுவெடிப்பு: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி…