சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து, இன்று நடைபெற்ற மக்கள் நீதிமய்யம் கட்சியியின் ஆலோசனை கூட்டத்தில்,   முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்த நிலையில், கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தல் தொடர்பாக  சென்னை தி.நகரில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் இன்று  ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், கட்சியின்   முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து  மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போது தனித்து போட்டியிடுவதா அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பது, கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கமல்ஹாசன் உருவாக்கிய ‘நாமே தீர்வு’ இயக்கத்திற்கு பங்களித்தவர்கள், களப்பணி ஆற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கம் கொரோனாவோடு மட்டும் முற்றுப் பெறுவதில்லை. தொடர்ந்து மக்கள் சேவைக்காகவும் பொது பிரச்னைகளுக்காகவும் களத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கட்சியின் உள் கட்டமைப்பு வலுப் பெற்று வருவதையும், கட்சியின் புதிய உறுப்பினர்கள் பெருமளவில் இணைந்து வருவதையும், இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம் வலுப்பெற்று வருவதையும், ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதை குறிப்பிட்ட கமல்ஹாசன் தங்களது தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்து நிர்வாகிகளை பாராட்டினார். அனைவரும் ஒருமித்து தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு களப்பணியாற்றி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கிராமசபை கூட்டங்களில் தொடர்ந்து ரத்து செய்வது, உள்ளாட்சி உரிமைகளை முடக்கி ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கும் ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டது. உள்ளாட்சி உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழக அரசால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்க வைத்து, மக்களின் உரிமைக்கும் என்றும் துணை நிற்கும் கமல்ஹாசனுக்கு கட்சியின் சார்பாக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.