சென்னை

இன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முதல் யு வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அடிக்கடி ஓ.எம்.ஆரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில் மத்திய கைலாஷ் பகுதியில் ‘எல்’ வடிவதிலும் ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பு, டைடல் பார்க் பகுதியில் ‘யு’ வடிவத்திலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.  ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

இந்த யு வடிவ மேம்பாலம் 450மீ நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது  மேம்பாலத்தில் 40 அடி இடைவெளியில், 20 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கும் பணிகளின் போது இடையூறாக இருந்த மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.