சென்னை

முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

நேற்று காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு முனைவர்.எம்.சுதாகர், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு விழா நடைபெறும் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சர் தா.மோ அன்பரசன் .செய்தியாளர்களிடம்,

”முதல்வர் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விழா காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ளதால் விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்து மேடை அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறோம்.’

என்று தெரிவித்துள்ளார்.