சென்னை

சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

 கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்றிட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம் முகத்துவாரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வஉசி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன் பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. 

மேலும் இந்த கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படும். அந்த தொகை ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 

இதைத்தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவகிராமங்களைசார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 12,500 வீதமும் மேலும் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடிபடகுகளைசரி செய்திட படகு ஒன்றிற்கு ரூ 10 ஆயிரம் வீதமும் மொத்த 3 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது .

இதைத் தொடர்ந்து நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4,6, 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ 7500 வீதம் மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.