வேலூர்

வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் அண்ணன் மகன் துரை தயாநிதியை முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி யின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.  துரை தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நேற்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மீண்டும் 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையை சுற்றிலும் முதல்வரின்ன் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.