சென்னை

பேருந்து நடத்துநர் ஒருவரைப் பயணி தாக்கியதால் உயிரிழந்ததையொட்டி அவர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளார்.

தமிழக அரசு பேருந்து ஒன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்றுள்ளது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் மர்ம நபர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.  நடத்துனர் பெருமாள் அந்த நபரிடம் டிக்கெட் எடுக்கச் சொல்லியுள்ளார். மது போதையில் இருந்த அந்த மர்ம நபர் நடத்துனரிடம் டிக்கெட் எடுக்க முடியாது எனச் சொல்லி இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

அந்த மர்ம நபர் தாக்கியதில் நடத்துநர் மயங்கி விழுந்துள்ளார்.  அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் பகுதியில் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.  காயம் அடைந்த நடத்துநர் பெருமாளை மேல் மருவத்தூர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ள சக பயணிகளிடம் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கின் முதற்கட்ட விசாரணையில், தப்பி ஓடிய நபர் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் தி.பெருமாள் பிள்ளையின் குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்து உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.