சென்னை

மலாக்கத்துறை மேலும் பல கொடுமைகளை அரங்கேற்றும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

கடந்த 2 நாட்களாகப் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முதல்வர் மு க ஸ்டாலின்,

’ இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலன் இவை யாவும் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றை தன்மை எதேச்சதிகாரம், அதிகார குவியலில் சிக்கி இந்த நாடே சிதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் அப்படிப்பட்ட பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இருக்கிறது. பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சி தலைவர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.

தமிழகத்தில் எப்படி ஒரு கூட்டணி அமைந்து தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகிறோமோ, அதேபோல இந்தியா முழுமையும் இதுபோல ஒரு கூட்டணி அமைந்து, அந்த வெற்றியைக் காண வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாக, மாநில அளவில் தேர்தல் கூட்டணியாக இது அமையக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பாட்னா, பெங்களூரு கூட்டங்களை பொறுத்தவரையில் எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.

அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த ஒன்றுதான்.  போகப் போக மேலும் பல கொடுமைகளை அமலாக்கத்துறை அரங்கேற்றும்.  நாங்கள் அவற்றைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.   அமலாக்கத்துறையின் கொடுமைகள் எல்லாவற்றையும் சட்டரீதியாகச் சந்தித்து நிச்சயம் வெற்றி காண்போம்”

எனத் தெரிவித்துள்ளார்.