தூத்துக்குடி:  பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் ஓட்டு விழாது  என  தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.பி.யான கனிமொழி கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மத்தியஅரசை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி தருவது மட்டுமன்றி அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்து வருகிறது என குற்றம் சாட்டினார்.

திமுக தலைமை அறிவித்தபடி, மாநிலம் முழுவதும எல்லோரும் எல்லாம் என்ற தலைப்பில் மாநிலம்  முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் என இணைத்து எல்லோரும் எல்லாம் பொதுக்கூட்டம்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் , நாஞ்சில் சம்பத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில்  பேசிய கனிமொழி,  திமுக மக்கள் பணிகள், ஆட்சி சாதனைகளை எடுத்துக் கூறினால் அது முடிவுற்றதாக இருக்கும்.. கருணாநிதி ஆட்சியின் நீட்சியாக இருக்கும் என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஜி.எஸ்.டி வரி வசூல் தமிழக பங்கீட்டு தொகையை ஒன்றிய அரசு தருவதில்லை..பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மிரட்டி ஜி.எஸ்.டி வரி வசூல் செய்து விட்டு பங்கு தொகையை தருவதில்லை, வரி கேட்ட வெள்ளையரை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை போல ஒன்றிய அரசினை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்,

தொடர்ந்து ஒன்றிய அரசினையும், ஒன்றிய அரசின்  மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து முதல்வர் கேள்வி கேட்டு வருகிறார். கேள்வி கேட்டதற்காக தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்தது வருகிறது.

மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டனர். தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் மழை வெள்ளை சேதங்களை பார்த்த பின்னர் கோவில் வளாகம் சகதியை பற்றி கேள்வி கேட்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஏதும் கேட்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி குடியேறினாலும் பாஜகவிற்கு வாக்கு விழாது.

அரசு விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எவ்வித திட்டங்களை நிறைவேற்றவில்லை , நாங்கள் தான் நிறைவேற்றி வருகிறோம் என்றார். தூத்துக்குடி துறைமுகம் வெளிப்புற விரிவாக்க பணிகளுக்கு சிதம்பரம் மத்திய நிதிஅமைச்சராக இருந்த போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது தேர்தல் வரவுள்ள தால் தூத்துக்குடி மக்களை ஏமாற்ற நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்த ரூ.15 லட்சத்தை தரவில்லை, ஆனால் தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகையை வழங்கி விட்டார்.

தமிழக அரசு அதிக நிதி கொடுக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.‌ அதிமுக, பாஜக கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்து வருகின்றனர். தமிழ் மொழி , தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசும் ஆளுநரை மத்திய அரசு தந்துள்ளது.

இவ்வாறு பேசினார்.