டில்லி,

நாட்டின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த திருச்சி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3வது இடத்தை பிடித்த திருச்சி தற்போது 6வது இடத்துக்கு பின்னோக்கி சென்றுள்ளது.

பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, நாடு முழுவதும் தூய்மையை ஊக்கப்படுத்த ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை தொங்கி வைத்த பிரதமர் மோடி, திட்டம் குறித்து அனைவரும் அறியும் வகையில் பிரபல நடிகர்களை கொண்டு விளம்பரப்படுத்தியது.

தமிழகத்தில் நடிகர் கமலஹாசன் இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தினார். தொடர்ந்து நாடு முழுவதும் இந்த திட்டம் விறுவிறுப்பாக அமல்படுத்தப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தியது.

நாடு முழுவதும் 500 நகரங்களில், சுமார் 37 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதையடுத்து தூய்மையான நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்த நகரங்கள்:-

இந்தூர் (மத்திய பிரதேசம்)
போபால் (மத்திய பிரதேசம்)
விசாகப்பட்டணம் (ஆந்திர பிரதேசம்)
சூரத் (குஜராத்)
மைசூர் (கர்நாடகம்)
திருச்சி (தமிழகம்)
டில்லி
நவிமும்பை (மராட்டியம்)
திருப்பதி (ஆந்திர பிரதேசம்)
வதோதரா (குஜராத்)

பட்டியலை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,  தூய்மை நகரங்கள் பட்டியலில் குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலத்தில் அதிகமான நகரங்கள் மேம்பட்டு உள்ளது என கூறினார்..

உத்தரபிரதேச மாநில நகரங்கள் பட்டியலில் கடைசி இடங்களை பிடித்து உள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த திருச்சி 3வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருச்சி 6–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.