விமான நிலையங்களில் முக்கிய பணிகள் தவிர மற்ற பணியிடங்களுக்கு தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள 60 விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு (சி.ஐ.எஸ்.எஃப். – CISF) தனியார் பாதுகாப்பு ஏஜென்சி (பி.எஸ்.ஏ – Private Security Agency PSA) பாதுகாப்புப் பணியாளர்களை பயன்படுத்த உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பெயரில் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) மூலம் விமான நிலையத்தில் CISF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

CISF வழங்கும் சேவைகளுக்கான கட்டணம், தேசிய விமானப் பாதுகாப்புக் கட்டண அறக்கட்டளையில் (NASFT) டெபாசிட் செய்யப்படுகிறது.

விமானப் பயண டிக்கெட்டுகளில் வசூலிக்கப்படும் விமானப் பாதுகாப்புக் கட்டணத்தில் (ASF) இருந்து இந்த தொகை மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு செல்கிறது.

குழந்தைகள் (2 வயதுக்குட்பட்டவர்கள்), இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், போக்குவரத்து/பரிமாற்றம் செய்யும் பயணிகள் போன்ற விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளைத் தவிர, மற்ற அனைத்து பயணிக்கும் விமானப் பாதுகாப்புக் கட்டணம் (ASF) வசூலிக்கப்படுகிறது.

45 விமான நிலையங்களில் முக்கிய பொறுப்பு இல்லாத பதவிகளில் தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளை சேர்ந்த 581 பேர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) தெரிவித்துள்ளது.

அதேவேளையில், 16 விமான நிலையங்களுக்கு 161 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் ஏவியேஷன் செக்யூரிட்டி (ஏவிஎஸ்இசி -AVSEC) வழங்கும் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் பயிற்சி முடித்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் செப்டம்பர் 24 முதல் இந்தப் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் AVSEC பயிற்சி முடித்த 74 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் ஏற்கனவே செப்டம்பர் 9 முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2022 ஏப்ரல் நிலவரப்படி, மொத்தம் 65 விமான நிலையங்களில் 30,996 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் அதற்காக பட்ஜெட்டில் ₹2488.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.