பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு கடந்த 17-08-2017 அன்று மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வெளியிட்டது.

அதில், ” திரு. அல்வா வாசு அவர்கள் உதவி இயக்குனராக திரைப்பட வாழக்கையை தொடங்கி பின்னர் நடிகராகி 900 படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் இனி சிகிச்சை பலன் அளிக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டு நேற்று அவரது இல்லத்தில் காலமானார். .

மேலும் நடிகர் சமூகம் சார்பாக அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அல்வாவாசுவின் இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை? ஏன் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சுரேஷ் காமாட்சி அவருடைய முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: “சுமார் 36 ஆண்டு காலங்கள் கலை உலகில் பன்முக தோற்றங்களில் நடித்துள்ள அல்வா வாசுவின் இறுதி நாட்கள் எண்ணற்ற துயரங்களைக் கொண்டவையாவே அமைந்துள்ளது.

இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க போதிய நிதியில்லாமல் நெருக்கடியில் இருந்தபோது கோடிகளில் புரளும் எந்த கோமாளிகளும் முன்வரவில்லை. ஏன்?

இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை. காரணம் இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதியில்லை. இவரின் இறுதிநாட்களில் கூட இருந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்த நடிகரும் இயக்குநருமான சரவணசக்தி, மேனேஜர் கண்ணன், மயில்சாமி, அண்ணன் சத்யராஜ் போன்ற சில நல்ல உள்ளம் கொண்டவர்களே உதவி செய்துள்ளனர்.

சக நடிகனின் கண்ணீரைத் துடைக்கவே எவனுக்கும் துணிவில்லை. இதில் சில பேர் சிஸ்டம் சரியில்லைங்கிறாங்க. பலபேர் அரசியலுக்கு வர்றேங்கிறான். காலக்கொடுமை!

வடிவேலுவுடன் சேர்ந்து எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கூட இவருக்கு உதவ முன் வரவில்லை. யார் எவரென்றே தெரியாமல் இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தணிகாசலம் கட்டணமே வேண்டாமென்று சென்றுள்ளார். நடிகர் சங்கமோ அறிக்கையில் இவருக்காக பிச்சையெடுத்ததோடு நிறுத்திக்கொண்டது.

நல்லாயிருக்கும்போது சந்தா வாங்குறதோ ஓட்டுக்காக வீடு வரை வந்து தாஜா பண்ணுவதோ முக்கியமில்லை. இறப்பின் பிடியிலிருக்கும்போது உதவுவதும், எங்கள் கலைக்குடும்பம் உங்களோடு உள்ளது என உடன் நிற்பதும்தான் சந்தா கட்டியதற்கான மரியாதைன்னு நான் நினைக்கிறேன். சங்கங்கள் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.