சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட மாஃபியா கும்பல் மிரட்டுவதாக பகீர் புகார் கூறியுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், குறிப்பிட்ட 4 பேர் தன்னை போனில் மிரட்டுவதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 28) கடந்த 2020ம் ஆண்டு சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவருடன் ஒரே அறையில் வாழ்ந்துவந்த சித்ராவின் திடீர் தற்கொலை மற்றும் அவரது முகத்தில் இருந்த காயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. சித்ரா பலருடன் டேட்டிங் சென்றதாகவும், அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல்கள் பரவின. இந்த மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நா 2 முறை கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில், சித்ராவின் தற்கொலை குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஹேமந்த், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 25ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஹேமந்த் கொடுத்த புகார் மனுவில்,  ‘‘நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான்தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிரூபிக்கவே உயிரோடு இருக்கிறேன்.

சித்ரா மரணத்துக்கு முன்னாள் அமைச்சர், ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது.

எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்? அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்ப கிடைக்க மாட்டாள்.

தற்போது என் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன்.மேலும், சித்ரா மரணத்திற்கு காரணமானவரிடம் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் பறிக்க முயல்கிறது. அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். தற்போது நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கி உள்ளேன்.

என்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருகிறார்.  இப்படியே இரு தரப்பினரும் என்னை மிரட்டி வருவதால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது.

எனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயிர் வாழ விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒருவேளை நான் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் சொன்ன தகவல்களை வெளியிடுவேன்” என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ரா கணவர் ஹேம்நாத் மீது, கடந்த 2015 ஆம் ஆண்டு, மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி 2 நபர்களிடம் சுமார் ஒன்றரை கோடிக்கு மேல்   மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.